எந்தவொரு தலைவரும் மற்ற இனங்களை இழிவுபடுத்திப் பேசக்கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் எச்சரித்துள்ளார்.
புக்கிட் மெர்தாஜாம்ல் உள்ள எஸ்.எம்.கே.ஏ ஷேக் தாஹிர் ஜலாலுதீன் பள்ளியின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைக் கூறினார்.
நெகிரி செம்பிலான் மாநிலம் ஜெம்போல் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில், பெரிகாத்தான் நேசனல் தேர்தல் இயக்குநர் சனுசி பேசிய கருத்துகள் நாட்டின் பல்லினச் சமூக நல்லிணக்கத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் இருந்ததாகக் குறிப்பிட்டு, அவர் அதற்கு இவ்வாறு பதிலளித்தார்.
மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் அனைவரும் நாட்டின் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு நல்ல குடிமக்களாக வாழ்ந்து வருவதால், நாட்டின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.








