பெட்டாலிங் ஜெயா, ஜூன் 22-
கட்சித் தாவல், கட்சியின் விதிமுறைககளை மீறுதல் போன்ற குற்றத்திற்காக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், கட்சியை விட்டு நீக்கப்பட்டு, அவர் தொகுதியை காலி செய்ய வேண்டும் என்று கட்சி உத்தரவிட்டாலும்,அது குறித்து தீர்க்கமாக முடிவு எடுக்கும் உச்ச அதிகாரம் நாடாளுமன்ற சபா நாயகருக்கு மட்டுமே உண்டு என்று சட்ட வல்லுநர் ஒருவர் கூறுகிறார்.
கட்சித் தாவல் மற்றும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பில் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரை நீக்குவதற்கோ அல்லது தொகுதியை காலி செய்யவோ பரிந்துரை செய்யும் உரிமை, அந்த நாடாளுமன்ற உறுப்பினர் இடம் பெற்றிருந்த கட்சிக்கு உண்டு.
ஆனால், சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதியை காலி செய்ய வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து முடிவு எடுக்கும் உச்ச அதிகாரம் நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல்- க்கு மட்டுமே உண்டு என்று அரசிலமைப்புச் சட்ட நிபுணரான பாஸ்டியன் பியுஸ் வேந்தர்கோன் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவு நல்கியதற்காக பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்யும்படி அக்கட்சியின் தலைமைத்துவம், நாடாளுமன்ற சபா நாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் அந்த சட்ட வல்லுநர், நடப்பு சட்டத்தை மேற்கோள்காட்டி பேசினார்.
நாடாளுமன்ற சபா நாயகர் பிறப்பிக்க்கூடிய உத்தரவைப் பொறுத்தே அந்த தொகுதியில் இடைத் தேர்தல் நடத்துவதா? இல்லையா? என்பது குறித்து தேர்தல் ஆணையமான SPR முடிவு செய்யும்.
எனவே நாடாளுமன்ற சபா நாயகருக்கு உள்ள உரிமையை எந்தவொரு தரப்பினரும் கேள்வி எழுப்ப முடியாது என்று பாஸ்டியன் பியுஸ் வேந்தர்கோன் தெளிவுபடுத்தியுள்ளார்.








