கோலாலம்பூர், ஜூன் 18-
பொருள்களின் விலைகளைக் குறைப்பதில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், விரிவான செயல்முறையை அறிவிப்பார் என தாம் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில், அவர் ஏமாற்றத்தை அளித்துவிட்டதாக, முன்னாள் பிரதமர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
உதவித்தொகை மறுசீரமைப்பின் வழி மிச்சப்படுத்தப்படும் 4 பில்லியன் வெள்ளி மக்களுக்கு திருப்பி அளிக்கப்படும் என அன்வார் இதற்கு முன்பு கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில், அத்தொகையை உட்படுத்திய பொருளாதார ஊக்குவிப்பு மற்றும் மக்கள் உதவித் திட்டங்களை அன்வார் நேற்று அறிவிக்காமல் போனது, அவர் மீதான தமது எதிர்பார்ப்பை சரிய செய்துவிட்டதாக பெர்சத்து தலைவருமான முகைதீன் அவரது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முட்டை விலையில் 3 சென்களைக் குறைத்ததற்காக, அன்வார் -ருக்கு நன்றியைக் கூறிக்கொண்ட அவர், இன்னும் விலைகள் குறைக்கப்பட வேண்டிய அடிப்படை பொருள்கள் நிறைய உள்ளதை சுட்டிக்காட்டினார்.
டீசல் உதவித்தொகை மீட்டுக்கொள்ளப்பட்டதால், முட்டை விலை மட்டும் ஏற்றம் காணவில்லை. மாறாக, மக்கள் பயன்படுத்துகின்ற அதிகமான பொருள்களும் பள்ளி பேருந்து கட்டணம் உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்களும் அதிகரித்துள்ளதாக, முகைதீன் கூறினார்.
நேற்று நாடு முழுவதும் A,B,C கிரேட்-ட்டுகளிலான கோழி முட்டைகளின் சில்லரை விலைகளில், 3 சென்கள் குறைக்கப்படுவதாக, பிரதமர் அன்வார் அறிவித்திருந்தார்.
A கிரேட் முட்டை 42 சென்னாகவும் B கிரேட் முட்டை 40 சென்னாகவும் C கிரேட் முட்டை 38 சென்னாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அன்வார் கூறியிருந்தார்.








