பாரிசான் நேஷனல் மற்றும் பெரிகாத்தான் நேஷனல் ஆகியவற்றுக்கு இடையே புதிய அரசியல் கூட்டணி எதுவும் உருவாக்கப்படாது என்றும், வரவிருக்கும் தேர்தலை இணைந்து எதிர்கொள்ள இரு தரப்புக்கும் இடையே தற்காலிகப் புரிந்துணர்வு உடன்பாடு மட்டுமே ஏற்பட்டுள்ளது என்றும் பாரிசான் நேஷனல் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹசான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுச் செம்போங் தொகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய முகமட் ஹசான், மலாய் சமூகத்தின் வாக்குகள் சிதறிப்போவதைத் தடுப்பதே இந்த உடன்பாட்டின் முக்கிய நோக்கமாகும் என்றார்.
முன்னதாக, இவ்விரு கூட்டணிகளும் இணைந்து 'பெரிகாத்தான் பாரிசான் நேஷனல்' என்ற புதிய பெயரில் செயல்படலாம் என எழுந்த ஆலோசனைகளை மறுத்த அவர், தேர்தல் வெற்றிக்காகவும் நாட்டின் நீண்டகால அரசியல் நிலைத்தன்மைக்காகவும் மட்டுமே இத்தகைய தற்காலிகப் புரிந்துணர்வு எட்டப்பட்டுள்ளது எனத் தெளிவுபடுத்தினார்.








