நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் தோல்வியடைந்தால் அது மத்திய அரசாங்கத்தின் நிலைத்தன்மைக்கு "பெரிய தாக்கங்களை" ஏற்படுத்தக்கூடும் என்று ஜசெக பொதுச்செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்தார். தேர்தல் பலம்தான் அரசியல் பிழைப்புக்கு அடிப்படை என்றும், போதிய தேர்தல் பலம் இல்லாவிட்டால் கட்சிகள் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாரிசான் நேசனல் தலைவர்கள் ஒற்றுமை அரசாங்கம் 2028 ஆம் ஆண்டின் தொடக்கம் வரை தொடரும் என்று உறுதியளித்திருந்தாலும், அரசியல் சூழல்கள் மாறக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டினார். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பாரிசான் நேசனல் சிறப்பாகச் செயல்பட்டால் அது மத்திய ஒற்றுமை அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கான நகர்வுகளைத் தூண்டக்கூடும் என்ற ஊகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இதனைக் கூறினார்.
மத்திய அமைச்சரவையில் அம்னோ தலைவர்களுடனான உறவு குறித்த கேள்விக்கு, புதன்கிழமைகளில் தாங்கள் நட்பாக இருப்பதாகவும், நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பில் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து அமைச்சர்கள் இணைந்து செயல்படுவதாகவும் அவர் நகைச்சுவையாகக் கூறினார். மேலும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு போதிய இடங்கள் கிடைக்கவில்லை என்றால் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்துவது தற்போதைய அரசியல் சூழலில் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக மாறிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.








