பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகத் தனது மூத்த மகள் நூருல் இசா எடுத்துள்ள முடிவை அதன் தலைவரும் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நல்லமுறையில் ஏற்றுக் கொண்டுள்ளார்.
அலோர் காஜாவில் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், நூருல் இசா தனது உயர் படிப்பைத் தொடர்வதற்காக வெளிநாடு செல்லவிருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும், பதவி விலகினாலும் அவர் கட்சியில் தொடர்ந்து தீவிரமாகச் செயல்படுவார் என்றும் கூறினார். முன்னதாக, கட்சிப் பதவியைத் துறந்தாலும் அன்வாரின் தலைமையிலான பிகேஆர் கட்சியின் போராட்டங்களுக்குத் தனது ஆதரவு என்றும் இருக்கும் என நூருல் இசா நேற்று உறுதியளித்திருந்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற கட்சித் தேர்தலில் ரஃபிஸி ரம்லியைத் தோற்கடித்து நூருல் இசா இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது தற்காலிகத் துணைத் தலைவராகச் செயல்படும் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் மற்றும் தேர்தல் இயக்குநர் அமிருடின் ஷாரி ஆகியோர் கட்சியின் பணிகளைத் திறம்பட வழிநடத்துவார்கள் என நூருல் இசா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








