இஸ்கண்டார் புத்ரி, ஜூன்.07-
ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு பரப்பப்படும் பொய்யான தகவல்கள் மற்றும் தவறான பிரசாரங்களை எதிர்கொள்ள பாரிசான் நேஷனல் முழுமையாகத் தயாராக இருக்க வேண்டும் என்று அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.
Iskandar Puteri-யிலுள்ள EduCity மைதானத்தில் இன்று நடைபெற்ற ஜோகூர் தேர்தலுக்கான பாரிசான் நேஷனல் தேர்தல் இயந்திர அறிமுக நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பொய்யான தகவல்கள் பரப்பப்படும் முறையானது தற்போது முற்றிலும் மாறி விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொய்யான குறும்பட காணொளிகள், திருத்தப்பட்ட உரைகள், போலி விளம்பரப் பதாகைகள், அடையாளம் தெரியாத சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் உண்மை போல் தோன்றும் தவறான தகவல்கள் மூலம் தற்போது பொய்யான தகவல்கள் பரப்படுவதையும் ஹாமிடி சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்நிலையில், அத்தகைய பொய்யான பிரசாரங்கள் மக்களின் நம்பிக்கையையும் சிதைக்கவும், ஒற்றுமையைக் குலைக்கவும், மக்களிடையே குழப்பத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தி பாரிசான் நேஷனலை நிராகரிக்க வைப்பதற்காகவே திட்டமிட்டு பரப்பப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
வரவிருக்கும் ஜோகூர் தேர்தலில் கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை கவனமாக பரிசீலித்து, உண்மை மற்றும் பொய்யை வேறுபடுத்தி மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








