பெட்டாலிங் ஜெயா, மே 30-
பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியுடன் இணைந்து நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் முயற்சியில், மலாய்க்காரர்களின் ஆதரவை வலுப்படுத்த அம்னோவால் மட்டுமே முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன் காரணமாக, கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் தலைவர்களையும் உறுப்பினர்களையும் மீண்டும் கட்சியினுள் சேர்த்துக்கொள்ள, அக்கட்சி முன்வந்திருப்பதாக, மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இணைப்பேராசிரியர் லாவ் சே வெய் தெரிவித்துள்ளார்.
பக்காத்தான் ஹாராப்பான்-ன்னால், மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெற முடியவில்லை என கூறிய அவர், கட்சியிலிருந்து நீக்கியவர்களை அம்னோ இதற்குமுன்பு மீண்டும் சேர்த்துக்கொண்டதை சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, மலேசிய அறிவியல் பல்கலைகழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சிவமுருகன் பாண்டியன் கூறுகையில், அரசியல் வியூகத்தின் அடிப்படையில் நீக்கப்பட்ட தலைவர்களை மீண்டும் கட்சியினுள் இணைத்துக்கொள்ள, அம்னோ அழைத்தால் அவர்கள் அக்கோரிக்கையை நிராகரிப்பார்கள் என கூறினார்.
ஆனால், கட்சியில் தங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டால், அவர்கள் அம்னோவில் மீண்டும் இணைவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.








