முன்னாள் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கிற்கும் தொழிலதிபர் சாருல் அகமது சுல்கிப்ளி- க்கும் இடையே பணப்பரிமாற்றம் செய்வதற்குத் தான் இடைத்தரகராகச் செயல்பட்டதாகத் தொழிலதிபர் ஜி. ஞானராஜா இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.
பினாங்கில் கடல்வழி சுரங்கப்பாதை திட்டத்தின் மூலம் லிம்முடன் சாருலுக்கு நேரடித் தொடர்பு இருந்ததாகவும், ஆனால் அவருக்குப் பணம் கொடுப்பதில் ஏற்பட்ட சில தடைகள் காரணமாகத் தான், அந்தப் பொறுப்பை ஏற்றதாகவும் ஞானராஜா கூறினார்.
2017-ஆம் ஆண்டில் லிம்மிடம் தான் பணத்தை ஒப்படைத்த போது, அதைச் சாருல் நேரில் கண்காணித்ததாக ஞானராஜா அவர் குறிப்பிட்டார். இருப்பினும், தொழில் அதிபர் கீதாஞ்சலியின் கணவரான ஞானராஜாவின் இந்த கூற்றை லிம்மின் வழக்கறிஞர் ராம் கர்பால் சிங் வன்மையாக மறுத்தார்.
சாருல் நேரடியாகப் பணத்தைக் கொடுப்பதில் எந்தச் சிக்கலும் இல்லாதபோது, ஞானராஜா போன்ற ஓர் இடைத்தரகர் தேவையில்லை என்று ராம் கர்பால் வாதிட்டார். லிம்மிடம் எந்தப் பணமும் கொடுக்கப்படவில்லை என்ற வழக்கறிஞர் ராம் கர்ப்பாலின் வாதத்தை ஞானராஜா முற்றாக நிராகரித்தார்.
மேலும், 2017-ஆம் ஆண்டில் சாருல் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நடத்திய விசாரணை குறித்துத் தகவல் பெற, தேசிய முன்னணியைச் சேர்ந்த நண்பர்கள் சிலரின் உதவியைத் தாம் நாடியதாக ஞானராஜா தெரிவித்தார்.
ஆனால், வழக்கறிஞர் ராம்கர்பால் சிங் குறுக்கு விசாரணையின் போது, ஞானராஜாவுக்கு அப்படிப்பட்ட நண்பர்கள் யாரும் இல்லை என்றும், விசாரணையைப் பயன்படுத்தி ஞானராஜா, சாருலிடம் பணம் பறிக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டினார்.
பினாங்கு கடல்வழி சுரங்கப்பாதை திட்டத்தில் 10 விழுக்காடு லாபத்தைப் பெற முயன்றது, சாருலிடம் இருந்து 3.3 மில்லியன் ரிங்கிட் லஞ்சமாகப் பெற்றது மற்றும் 208.7 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான மாநில நிலத்தைத் தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை லிம் குவான் எங் எதிர்கொண்டுள்ளார்.








