போர்டிக்சன் பகுதியில் உள்ள லிங்கி பிராந்தியத்தை ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகவும், துறைமுக மற்றும் தொழில் நகரமாகவும் மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்களை மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹாருன் அறிவித்துள்ளார். மாநிலத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், போர்டிக்சன் பகுதியின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்தத் திட்டங்கள் உதவும் என்று தெரிவித்தார்.
சுங்கை லிங்கி பகுதியில் உள்ள பழைய ஜெட்டிகளை நவீனமயமாக்கி, தாஞ்சுங் அகஸ் பகுதியைச் சுற்றுலா மையமாக மாற்ற விரிவான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் கவரப்படுவதோடு, கடல் மீன்பிடித்தலை நம்பியிருக்கும் மீனவர்கள் தங்களின் பொருளாதாரத்தை சுற்றுலாத் துறை சார்ந்த புதிய தொழில்கள் மூலமாகவும் மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், பாசிர் பாஞ்சாங் பகுதியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட 'மிட்போர்ட்' புதிய துறைமுகம் அமைக்கப்படவுள்ளது. இத்துடன் 1,400 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற்துறை பகுதிகள் உருவாக்கப்படுவதால், இப்பகுதிக்கு ஏராளமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் பெருமளவில் பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








