சிரம்பான், ஆகஸ்ட்.01-
16-வது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி 51.58 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது கடந்த 2023-ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலில், இதே நேரத்தில் பதிவான 48.82 சதவீதத்தை விட அதிகமாகும்.
இன்று காலை முதல் அனைத்து தரப்பு வாக்காளர்களும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். திருமண நாளிலேயே வாக்குச் சாவடிக்கு வந்த புதுமணத் தம்பதிகளும், 92 வயதிலும் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய மூத்த வாக்காளரும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.
இந்நிலையில், வாக்கு நிலவரம் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, Seri Menanti தொகுதியானது 57.6 சதவீதம் வாக்குகள் பதிவாகி முன்னிலை வகிக்கின்றது.
அதைத் தொடர்ந்து Senaling தொகுதியில் 57.2 சதவிகித வாக்குகளும், Kota தொகுதியில் 56.9 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.
அதேவேளையில், Lobak தொகுதியில் 44.6 சதவிகித வாக்குகளும், Lukut தொகுதியில் 45.4 சதவிகித வாக்குகளும், மற்றும் Mambau தொகுதியில் 46.1 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.
மாநிலத்தின் 36 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் மொத்தம் 8 லட்சத்து 89 ஆயிரத்து 490 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
கடந்த ஜூன் 5-ஆம் தேதி மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தேர்தல் முன்னதாகவே நடத்தப்படுகின்றது.
கடந்த 2023 -ஆம் ஆண்டு, மாநிலத் தேர்தலில் Pakatan Harapan - Barisan Nasional கூட்டணி இணைந்து 36 தொகுதிகளில் 31 இடங்களை கைப்பற்றி ஆட்சியமைத்தது.
இம்முறை Pakatan Harapan அனைத்து 36 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.
Barisan Nasional கூட்டணியானது PAS தலைமையிலான Perikatan Nasional கூட்டணியுடன் தேர்தல் ஒப்பந்தம் செய்து 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
மீதமுள்ள 11 தொகுதிகளில் PAS களமிறங்கியுள்ளது.
அதேவேளையில், Perikatan Nasional கூட்டணியில் இடம் பெற்றுள்ள Bersatu, தனது சொந்த சின்னத்தில் 24 வேட்பாளர்களை தனியாக நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் இன்று இரவு வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.








