பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இணைய ம.இ.கா எந்தவோர் அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தையும் முன் வைக்கவில்லை. கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் அவ்வாறு கூறியிருக்கிறார்.
அதே வேளை,பாரிசான் நேஷனலில் இருந்து விலகுவதா அல்லது கூட்டணியில் நீடிப்பதா என்பது குறித்தும் கட்சி இன்னும் முடிவு எடுக்கவில்லை. அத்தகைய முடிவு மத்திய செயற்குழுவின் அதிகாரத்திற்கு உட்பட்டது என அவர் தெளிவுபடுத்தினார்.
ம.இ.கா, பெரிக்காத்தான் நேஷனல்லில் இணைந்து விட்டதாகக் கூறப்படுவது வெறும் ஆரூடங்களே. அச்செய்தி எங்கிருந்து பெறப்பட்டது என்று தெரியவில்லை என சரவணன் கூறினார்.
முன்னதாக PN பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹசான் இன்று, ம.இ.கா அக்கூட்டணியில் ஓர் உறுப்புக் கட்சியாக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளதாகக் கூறியிருந்தார்.
இவ்வேளையில், கடந்த ஆண்டு நடைபெற்ற தங்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்திற்கு முன், நாட்டின் அரசியல் சூழலில் தங்களின் நிலை என்ன என்பதை கட்சி வெறுமனே விசாரித்து வந்தது என சரவணன் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு வருடாந்திர பொதுக் கூட்டத்தில், BN-ஐ விட்டு வெளியேறி PN-இல் இணைவதற்கான தீர்மானத்தை ம.இ.கா பேராளர்கள் நிறைவேற்றினர். இருப்பினும், இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.








