மானியக் கொள்கைகளை வகுப்பதில் டி20 போன்ற வருமானக் பிரிவுகளை அரசாங்கம் கடுமையான முறையில் வகைப்படுத்தவில்லை என்று பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமட் நாசிர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய வகைப்பாடுகள் ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் உண்மையான நிலையைப் பிரதிபலிக்காததால், இவற்றைத் தங்களது அமைச்சகம் தவிர்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், வருமானத்தை மட்டும் பார்க்காமல் அடிப்படைச் செலவுகள் உள்ளிட்ட பல விஷயங்களை உள்ளடக்கிய விரிவான அணுகுமுறையே மானிய இலக்கு விவாதங்களுக்குத் தேவைப்படுகிறது என்றார்.
உலகளாவிய மோதல்களால் பொருளாதார அழுத்தம் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், அவ்வப்போது தணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பு குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, உலகப் பேராதிக்க நாடுகளுக்கு இடையிலான உறவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டின் பொருளாதாரத் திறனைப் பாதுகாக்கும் வகையில் எரிபொருள் மற்றும் பிற பொருட்களின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்வதற்கே அரசாங்கம் தற்போது முன்னுரிமை அளித்து வருகிறது என்று விவரித்தார்.








