கோலாலம்பூர், பிப்ரவரி.21-
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்கப் போகும் நபர் யார் என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய நாளாக நாளை ஞாயிற்றுக்கிழமை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை மதியம் 3 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள பாஸ் கட்சித் தலைமையகத்தில் நடைபெறவுள்ள பெரிக்காத்தான் நேஷனல் உச்சமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படவுள்ளது. இதனை பாஸ் கட்சியின் உதவித் தலைவர் டத்தோ இட்ரிஸ் அஹ்மாட் உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, இக்கூட்டம் குறித்துத் தகவல் வெளியிட்ட கூட்டணியின் துணைப் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான், இரண்டு முக்கியச் செயல்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார். முதலாவதாக, டான் ஶ்ரீ முகைதீன் யாசின் ஏற்கனவே அறிவித்த தலைவர் பதவி விலகல் கடிதத்தை அங்கீகரிப்பது மற்றும் கூட்டணியை வழிநடத்தப் போகும் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது ஆகியவையே இச்சிறப்புக் கூட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும் என்று தக்கியுடின் குறிப்பிட்டார்.








