உலகளாவிய எரிபொருள் விலை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும், மலேசியாவில் வரும் மாதங்களில் எண்ணெய் விநியோகத் தட்டுப்பாடு ஏற்படாது எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவாதம் அளித்துள்ளார்.
கோலாலம்பூர்-அங்காரா உரையாடல் அமர்வில் பேசிய டத்தோஸ்ரீ அன்வார், பெட்ரோனாஸ் நிறுவனத்தின் வலுவான இறக்குமதி வரலாறு மற்றும் எண்ணெய் உற்பத்தி நாடுகளுடனான சிறந்த உறவு காரணமாக எண்ணெய் விநியோகம் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், விநியோகத்தில் பாதிப்பு இருக்காது. தற்போதைய நிலையில் எரிபொருள் மானியத்திற்காக அரசாங்கம் மாதம் 4 பில்லியன் ரிங்கிட் செலவிடுகிறது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.
மானிய விலையிலான ரோன்95 பெட்ரோல், லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 சென் விலையில் குறைந்தபட்சம் மே மாதம் வரை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.
எனினும், டீசல் மற்றும் ரோன்97 பெட்ரோல் விலையில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.








