மலேசிய இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளை இனித் தானே நேரடியாகக் கண்காணித்துப் பொறுப்பேற்கப் போவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்தியச் சமூகத்திடமிருந்து பெறப்பட்டப் பல்வேறு புகார்கள் மற்றும் கோரிக்கைகளைத் தொடர்ந்தே இந்த நேரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று இரவு சிரம்பான், க்லானா ரிசார்ட்டில் "இந்திய சமுதாயத்துடன் பிரதமர் நல்லிணக்க சந்திப்பு!" எனும் மாபெரும் நிகழ்விற்கு தலைமையேற்று, இந்திய சமுதாயத்தை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் முன்னிலையில் பிரதான உரை நிகழ்த்துகையில் டத்தோஸ்ரீ அன்வார் இந்த உத்தரவாத்தை அளித்தார்.
“மித்ரா அமைப்பு மட்டுமின்றி, இந்திய சமுதாயத்தின் ஒட்டுமொத்தப் பிரச்சினைகளுக்கும் இனி நானே பொறுப்பு; நானே நேரடியாக இவற்றைத் தன் கைகளில் எடுக்கிறேன்,” என அரங்கம் அதிரும் பலத்த கரவொலிக்கு இடையே பிரதமர் இந்த வரலாற்றுப் பூர்வ உறுதிமொழியை வழங்கினார்.
இருப்பினும், மித்ரா அமைப்பைக் கண்காணிக்கும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன், ஏற்கனவே அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவார் என்றும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.

பிரதமரின் இந்த நேரடித் தலையீடு மூலம், இந்தியச் சமுதாயத்திற்கான கொள்கை ஒருங்கிணைப்புகள் மேலும் வலுவடையும் என்றும், குறிப்பாக, டெகூன் நேசனல், / அமனா இக்தியார் மலேசியா நிதியுதவி உத்தரவாதத் திட்டங்கள், பொருளாதார மேம்பாடு மற்றும் நலன் சார்ந்த திட்டங்கள் இனி அதிவேகமாகச் செயலாக்கம் பெறும் என பிரதமர் உறுதி அளித்தார்.
"வெறும் வதந்திகளையும், சில தரப்பினரின் குற்றச்சாட்டுகளையும் நம்பாமல், ஒற்றுமை அரசாங்கத்தின் சாதனைகளையும், திட்டங்களையும் பார்த்து மக்கள் எங்களை மதிப்பிட வேண்டும்" என்றும் பிரதமர் இந்தியச் சமூகத்திற்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"அறுசுவை விருந்து மற்றும் கலைவிழாவுடன் கோலாகலமாக நடைபெற்ற இந்த மாபெரும் நல்லிணக்கச் சந்திப்பில் பிரதமரின் இந்த அதிரடி அறிவிப்பு, ஒட்டுமொத்த இந்தியச் சமுதாயத்தின் மத்தியிலும் புதிய எழுச்சியையும் பெரும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது."
இந்நிகழ்வில் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ பாமி பட்சில், மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், நெகிரி செம்பிலான் மாநில தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் சாந்தகுமார் பச்சையப்பன், மாநில இந்திய வர்த்தக, தொழில் சபையின் தலைவர் எம். திருநாவுக்கரசு உட்பட இந்திய சமுதாயத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.








