நெகிரி செம்பிலான் மாநில வீடமைப்பு, ஊராட்சி மற்றும் போக்குவரத்து ஆகிய மூன்று முக்கிய துறைகளுக்கும் பொறுப்பேற்றுள்ள ஒரே இந்திய ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற முறையில், தமிழ்ப்பள்ளிகள் மற்றும் ஆலயங்களின் நில விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதில் தாம் உறுதியாக இருப்பதாக ஜே. அருள்குமார் தெரிவித்துள்ளார்.
தமது துறைக்கு உட்பட்ட வீடமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களின் போது, இவற்றின் நலன்கள் புறக்கணிக்கப்படாமல் மாற்று நிலங்கள் கிடைப்பதை தாம் தொடர்ந்து உறுதி செய்து வருவதாக நெகிரி செம்பிலான் மாநில தேர்தலில் தமது நீலாய் தொகுதியை மீண்டும் தற்காத்துக்கொள்வவதற்கு பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் அருள்குமார் குறிப்பிட்டார்.
இதற்குச் சிறந்ததொரு சான்றாக சிரம்பான், லாபு தமிழ்ப்பள்ளி பிரிவு 4-ஐ அவர் சுட்டிக்காட்டினார். வெறும் 17 மாணவர்கள் மட்டுமே பயில்கிறார்கள் என்ற காரணத்திற்காக அப்பள்ளி கைவிடப்படவில்லை. மாறாக, சிரம்பானில் அமையவிருக்கும் பிரம்மாண்ட 'மலேசிய விஷன் வேலி எனும் எம்விவி நகரத் திட்டத்தில், இப்பள்ளிக்கு மாற்று நிலமாக 6 ஏக்கர் நிலம் பெற்றுத் தந்துள்ளதாக அருள்குமார் விவரித்தார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பானின் நிலையான அரசாங்கம் அமைந்தால் மட்டுமே இதுபோன்ற இந்தியர் நலன், தமிழ்ப்பள்ளி மற்றும் ஆலய நில விவகாரங்களுக்குத் தொடர்ந்து நல்லதொரு தீர்வு காண முடியும் என்றும் நீலாய் தொகுதியில் 5 முனைப் போட்டியை எதிர்நோக்கியிருக்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரான ஜே. அருள்குமார் வலியுறுத்தினார்.








