பினாங்கு, ஜூன் 04-
வரக்கூடிய பினாங்கு, சுங்காய் பக்காப் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், பாக்காத்தான் ஹாராப்பான் சார்பில் PKR கட்சி போட்டியிடவுள்ளது.
பினாங்கு ஒற்றுமை அரசாங்கத்தின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அம்மாநில முதலமைச்சர் சௌ கோன் இயோவ், அத்தேர்தலுக்கு பினாங்கு துணை முதலமைச்சர் முகமது அப்துல் ஹமீத் தலைமையேற்பார் என்றார் அவர்.
3 தவணைகள் அத்தொகுதி PKR-ரின் வசமிருந்த நிலையில், கடந்தாண்டு நடைபெற்ற பினாங்கு சட்டமன்ற தேர்தலில், பெரிக்காதான் நசியனால் கூட்டணி சார்பில் போட்டியிட்டிருந்த பாஸ் கட்சி அத்தொகுதியை வென்றிருந்தது.
கடந்த மே மாதம் 24ஆம் தேதி, சுங்காய் பக்காப் சட்டமன்ற உறுப்பினர் நோர் ஜம்ரி லத்தீப் உடல்நலக்குறைவால் காலமானதை அடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வரக்கூடிய இடைத்தேர்தலில், சுங்காய் பக்காப் தொகுதியை மீண்டும் PKR கட்சி வெல்வதற்கு, அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்படும் என சௌ கோன் இயோவ் கூறினார்.








