ஷா ஆலாம், நவ.11-
சிலாங்கூர் மாநில டிஏபி தலைவாக பொறுப்பேற்று வந்த கோபிந்த் சிங் டியோவின் இடத்தை நிரப்புவதும், அப்பொறுப்பை ஏற்பதும், அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று சிலாங்கூர் மாநில டிஏபி-யின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எங ஸே ஹான் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் மாநிலத்தில் மாறுப்பட்ட கருத்துக்களினால் பிரிந்து கிடந்த வெவ்வேறு அணியினரை ஒருங்கிணைத்து, ஒரு சமாதானத்தூதுவராக கோபிந்த் சிங் செயல்பட்டுள்ளார் என்று எங ஸே ஹான் வர்ணித்துள்ளார்.
எனினும் இதுநாள் வரையில் சிலாங்கூர் டிஏபி-க்கு தலைமையேற்று, சிறப்பான பங்களிப்பை வழங்கிய கோபிந்த் சிங் டியோவிற்கு தமது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்வதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான எங ஸே ஹான் குறிப்பிட்டார்.
நேற்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில டிஏபி-யின் 2024 - 2027 ஆம் ஆண்டுக்கான பொறுப்பாளர்கள் தேர்தலில் மாநில தலைவர் பதவியை தற்காத்துக்கொள்வதில் கோபிந்த் சிங் டியோ தோல்விக்கண்டது, குறித்து கருத்துரைக்கையில் எங ஸே ஹான் இவ்வாறு தெரிவித்தார்.
நேற்று ஷா ஆலாம், ஐடியல் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில டிஏபி–யின் 15 பொறுப்பாளர்களுக்கான தேர்தலில் இலக்கவியல் துறை அமைச்சரான கோபிந்த் சிங் டியோ 675 வாக்குகள் பெற்று தோல்விக் கண்டார்.
சிலாங்கூர் மாநில டிஏபி-யை வழிநடத்துவதிலும், தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மத்தியில் ஒற்றுமையை விதைப்பதிலும் கோபந்த் சிங் டியோ எத்தகைய அணுகுமுறையை கையாண்டு வந்தாரோ அந்த அணுமுறையை தாம் கையாளப் போவதாக கின்ராரா சட்டமன்ற உறுப்பினரான எங ஸே ஹான் குறிப்பிட்டார்.
இதனிடையயே சிலாங்கூர் மாநில புதிய தலைமைத்துவத்திற்கு தம்மால் இயன்ற பங்களிப்பை தொடர்ந்து வழங்கப் போவதாக டிஏபி-யின் முன்னாள் தலைவர் காலஞ்சென்ற கர்ப்பால் சிங்கின் புதல்வரான கோபிந்த் சிங் டியோ உறுதி அளித்துள்ளார். அதேவேளையில் தேர்தல் முடிவை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டார்.








