எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து தாம் விலகத் தயாராக உள்ளதாக ஹம்சா ஜைனுதீன் தெரிவித்துள்ளார்.
என்றாலும், பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியைச் சேர்ந்த பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை விரும்பினால் மட்டுமே தாம் அப்பதவியிலிருந்து விலகப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் ஒரு தனி கட்சிக்கு இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் இல்லை என்பதையும் ஹம்சா சுட்டிக் காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், தான் அவர்களது தலைவராக இருப்பதை விரும்பவில்லை என்றால், பெரும்பான்மையானோரின் விருப்பத்தை மதித்து அப்பதவியிலிருந்து விலகுவதாக ஹம்சா உறுதியளித்துள்ளார்.
மேலும், தனக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவராக யார் வேண்டுமானாலும் பொறுப்பேற்கலாம் என்று தெரிவித்துள்ள ஹம்சா, அந்நபருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், பதவியைக் காட்டிலும், எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக நாடாளுமன்றத்தில் திறம்பட செயல்படுவதே முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஹம்சாவுக்குப் பதிலாக பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எதிர்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்பார் என பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி கடந்த வாரம் முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.








