தாபோங் ஹாஜி நிர்வாகத்தின் சொத்து விற்பனை சர்ச்சைகள் தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று பொதுமக்களுக்குப் பகிரங்கமாக வெளியிட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.

இன்று சிரம்பானில் உள்ள பெர்னாமா செய்தி நடவடிக்கை அறைக்கு வருகை தந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2014 முதல் 2020 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய இந்த அறிக்கை, விரைவில் நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என்றார்.

மேலும், இந்த அறிக்கையின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், சட்ட விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அமலாக்க முகமைகள் மூலம் அவர்கள் மீது உடனடியாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்றும் அவர் எச்சரித்தார். ஆர்.சி.ஐ பரிந்துரைத்த 25 சீர்திருத்தங்களில் 75 சதவீதத்தை தாபோங் ஹாஜியின் தற்போதைய நிர்வாகம் ஏற்கனவே வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், இதன் பலனாகவே 2025 நிதி ஆண்டிற்கான லாப விநியோக விகிதம் 3.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் சுட்டிக்காட்டினார்.









