கோலா கங்சார் பெர்சாத்து பிரிவு துணைத் தலைவர் டத்தோ அட்லி ஷா அஹ்மாட் தா மற்றும் அந்தப் பிரிவின் 11 கிளைத் தலைவர்களில் 8 பேர், அனைத்து கட்சிப் பதவிகளிலிருந்தும் விலகியதோடு, பெர்சாத்து கட்சியிலிருந்தும் வெளியேறுவதாக இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தனர்.
பூங்கா ராயா, உலு கெனாஸ், சயோங் லெம்பா, பெண்டாங் கெரிங், செங்காங், ஜெர்லுன், புக்கிட் ரெசிடன் மற்றும் லெம்போர் ஆகிய 8 கிளைகளின் தலைவர்களும் இந்த முடிவில் இணைந்துள்ளனர்.
கட்சியின் எதிர்கால அரசியல் போராட்டம் மற்றும் கோலா கங்சார் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தாங்கள் அதிக நம்பிக்கை கொண்டுள்ள வேறு அரசியல் தளத்தின் மூலம் தொடர்ந்து செயல்பட முடிவு செய்ததாக அட்லி ஷா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கோலால கங்சார் பெர்சாத்து பிரிவில் இருந்த 11 கிளைகளில் தற்போது 3 கிளைகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
இதற்கிடையில், கோல கங்சாரைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெர்சாத்து உறுப்பினர்கள் இந்த விலகல் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்க வந்திருந்ததாகவும் அட்லி ஷா குறிப்பிட்டுள்ளார்.








