மடானி 2025' சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியத் தொகையை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை நீக்கி, நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
சுமார் 10,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், 70 சதவீதத்திற்கும் அதிகமான கோரிக்கைகள் கடந்த 6 மாதங்களாக நிலுவையில் இருப்பதாக மலேசிய தேசிய தொழில்நுட்ப சங்கம் புகார் தெரிவித்தது. இது சேவை வழங்குநர்களுக்கும் சிறு வணிகங்களுக்கும் பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையில் இன்று நடைபெற்ற தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றக்கூட்டத்தில் கூட்டத்தில் இப்பிரச்னையை தாம் முன்வைத்ததாக அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்தார்.
நிலுவையில் உள்ள அனைத்து மானியத் தொகையையும் இந்த மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்கான நிதி ஒதுக்கீட்டை நிதி அமைச்சகம் விரைவுபடுத்தும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.








