நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெர்சாத்து கட்சியானது, ஒரு தொகுதியில் கூட வெற்றியடையக் கூடாது என்று அம்னோ உதவித் தலைவர் காலித் நோர்டின் கூறியிருப்பது, ஜோகூர் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அம்னோ அகந்தை அடைந்திருப்பதையே காட்டுவதாக பெர்சாத்து இணைப்பிரிவுத் தலைவர் ஆர். சஞ்சீவன் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், அம்னோ தனது கடந்த கால தவறுகளில் இருந்து இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றும், ஜோகூரில் கிடைத்த வெற்றி அலை, நெகிரி செம்பிலானிலும் தொடரும் என்று அக்கட்சி தவறாக கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெரம் பாடாங் சட்டமன்றத் தொகுதியில் பெர்சாத்து சார்பில் வேட்பாளராகக் களமிறங்கும் சஞ்சீவன், ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலானின் அரசியல் சூழ்நிலைகள் முற்றிலும் வேறுபட்டவை என்பதால், ஜோகூரில் பாரிசான் நேஷனலுக்கு கிடைத்த வெற்றி நெகிரி செம்பிலானில் மீண்டும் நிகழும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றும் விவரித்துள்ளார்.
மேலும், பெரிக்காத்தான் நேஷனலுக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளால் பெர்சாத்து கட்சி சிதைந்துவிடும் என்ற கருத்தையும் அவர் நிராகரித்துள்ளார்.
பெரிக்காத்தான் நேஷனலுக்குள் என்ன நடந்தாலும், அதனால் பெர்சாத்து கட்சிக்கு எந்த வகையிலும் பாதிக்காது என்றும் சஞ்சீவன் வலியுறுத்துள்ளார்.








