ஜோகூர் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் கூட்டணிக்கு தற்போதைய மந்திரி பெசார் டத்தோ ஆன் ஹாபிஸ் காஸி தொடர்ந்து தலைமையேற்பார் என்று துணைப் பிரதமரும் பாரிசான் நேஷனல் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி உறுதிப்படுத்தியுள்ளார்.
திராங்கானுவில் நடைபெற்ற 2026 பூமிபுத்ரா தொழில்முனைவோர் பொருளாதார மாநாட்டின் நிறைவு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன் ஹாபிஸ் சமர்ப்பித்த வேட்பாளர் பட்டியல் தற்போது பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவித்தார். பாரிசான் நேஷனல் கூட்டணியின் பிற அங்கத்துவக் கட்சிகளின் பரிந்துரைகளையும் மதித்து, கலந்தாலோசனைக்குப் பின்னரே இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.
கடந்த 2022 தேர்தலை விட இம்முறை ஜோகூரில் 40-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்ற பாரிசான் நேஷனல் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், முறையான வியூகங்கள் மற்றும் கடின உழைப்பின் மூலமே இந்த வெற்றியை அடைய முடியும் என்றும் ஜாஹிட் குறிப்பிட்டார்.








