ஜோகூர் பாரு, ஜூன்.01-
ஜோகூர் மாநில சட்டமன்றம் இன்று ஜுன் முதல் தேதி அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டுள்ளதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் ஃகாஸி அறிவித்துள்ளார். இதன் மூலம் அடுத்த 60 நாட்களுக்குள் 16-ஆவது மாநிலத் தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம், மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளார். மாநிலத்தில் ஒரு நிலையான மற்றும் வலுவான அரசாங்கம் அமைவதை உறுதிச் செய்யும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மந்திரி பெசார் ஓன் ஹாஃபிஸ் ஃகாஸி செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஜோகூர் தேர்தலில், மொத்தமுள்ள 56 இடங்களில் 40 இடங்களைக் கைப்பற்றி பாரிசான் நேஷனல் ஆட்சியை அமைத்தது குறிப்பிடத்தக்கது.
மாநில சட்டமன்றம் கலைப்பானது, கடந்த சில வாரங்களாக நிலவி வந்த அரசியல் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.








