கோலாலம்பூர், மே.31-
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் அதிகாரப்பூர்வ உறுப்பினர் கட்சிகளுக்கு மட்டுமே அதன் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்படும் என்று பாஸ் கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
வரவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில் Ikatan Prihatin Rakyat எனப்படும் IPR கூட்டணிக் கட்சிகள் பெரிக்காத்தான் நேஷனல் சின்னத்தில் போட்டியிடலாம் என்ற பெர்சத்து கட்சித் தலைவர் டான் ஶ்ரீ முஹிடின் யாசினின் பரிந்துரை குறித்து எந்த அதிகாரப்பூர்வ கூட்டத்திலும் விவாதிக்கப்படவில்லை என பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் இன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் IPR உறுப்பினர் கட்சிகள் பெரிக்காத்தான் கூட்டணியின் அங்கத்தினர்கள் அல்ல என்றும், அவர்கள் இதுவரை பெரிக்காத்தான் நேஷனலில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், “பெரிக்காத்தான் சின்னத்தில் போட்டியிட அவர்களை எப்படி அனுமதிக்க முடியும்?” என துவான் இப்ராஹிம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கூட்டணியின் சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு உறுப்பினர் கட்சிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மலாக்காவில் நேற்று நடைபெற்ற அரசியல் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய முஹிடின், Ikatan Prihatin Rakyat கூட்டணியில் உள்ள கட்சிகள் பெரிக்காத்தான் நேஷனல் சின்னத்தில் போட்டியிடலாம் எனக் கூறியிருப்பது அக்கூட்டணிக் கட்சியினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.








