ஜோகூர் பாரு, ஜூன்.01-
ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினர் மரினா இப்ராஹிம் அடுத்த ஜோகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிடாமல், அரசியலிலிருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்திருப்பது குறித்து அம்மாநில ஜசெக தலைவர் தியோ நீ சிங் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.
கட்சியானது, மரினாவை மற்றொரு நகர்ப்புற தொகுதியில் நிறுத்த திட்டமிட்டிருந்ததாகவும், இது பாரம்பரிய நடைமுறைகளைத் தாண்டி ஆதரவை விரிவுபடுத்தும் ஒரு முக்கிய வியூகம் என்றும் தியோ நீ சிங் தமது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜோகூர் பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தற்போது மாநிலத் தேர்தலுக்கான தொகுதி பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் வென்ற நகர்ப்புற தொகுதியில் ஒரு மலாய் வேட்பாளரை நிறுத்துவது ஒரு சிறந்த வியூகமாக இருக்கும் என ஜசெக கருதுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், அதனை செயல்படுத்த மரினா இப்ராஹிம் மிகவும் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளராக இருந்த நிலையில், அவரின் அரசியல் ஓய்வு முடிவு கட்சிக்குள் பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.








