சிரம்பான், ஆகஸ்ட்.01-
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சந்தித்த தோல்விக்கு எதிர்த்தரப்பினர் கையில் எடுத்த ‘இன மற்றும் அடையாள அரசியலே’ காரணம் என்று அக்கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது. இன்றிரவு சிரம்பானில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் இயக்குநர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹரூண் ஆகியோர் கூட்டாக இதனைத் தெரிவித்தனர்.
வாக்காளர்களின் முடிவை ஏற்பதாகக் கூறிய டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹரூண், கடந்த 8 ஆண்டுகளில் தங்களின் சிறந்த நிர்வாக அறிக்கையில் இன்னும் சில குறைபாடுகள் இருந்திருக்கலாம் என்றார். மேலும், மலேசியர்களுக்கு இனவாதப் பேச்சு வேண்டுமா அல்லது வளர்ச்சி வேண்டுமா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில், மலாய்க்கார அல்லாதவர்கள் தங்களைப் புறக்கணிக்கவில்லை என்றும், அவர்களின் ஆதரவு இன்னும் வலுவாகவே உள்ளது என்றும் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெளிவுபடுத்தினார். அடுத்த ஓராண்டில் வரவிருக்கும் 16-ஆவது பொதுத் தேர்தலுக்குள் தங்களின் அரசியல் வியூகங்களையும் பிரச்சாரப் பாணியையும் மாற்றி அமைக்கவுள்ளதாக அவர்கள் உறுதியளித்தனர்.








