Mar 4, 2026
Thisaigal NewsYouTube
கோபித்துக் கொள்வதை நிறுத்திவிட்டு பாரிசான் நேஷனலிலேயே நீடியுங்கள்" - மஇகா மற்றும் மசீச-விற்கு ஸாஹிட் ஹமிடி அழைப்பு
அரசியல்

கோபித்துக் கொள்வதை நிறுத்திவிட்டு பாரிசான் நேஷனலிலேயே நீடியுங்கள்" - மஇகா மற்றும் மசீச-விற்கு ஸாஹிட் ஹமிடி அழைப்பு

Share:

கோலாலம்பூர், ஜனவரி.16-

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது குறித்து ஆலோசித்து வரும் மஇகா மற்றும் மசீச ஆகிய கட்சிகள், கோபித்துக் கொள்வதை விட்டுவிட்டு கூட்டணியிலேயே நீடிக்க வேண்டும் என்று அம்னோ தலைவரும் பாரிசான் தலைவருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டின் நலன் கருதி ஒற்றுமை அரசாங்கத்தில் இணைந்த பாரிசான் நேஷனலின் முடிவு, அதன் உறுப்புக் கட்சிகளிடையே உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது என்பதை அஹ்மாட் ஸாஹிட் ஒப்புக் கொண்டார். "சிலர் கூட்டணியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர், மற்றவர்கள் கோபித்துக் கொண்டு வேறு இடங்களுக்குச் செல்ல நினைக்கிறார்கள்" என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் 79-வது அம்னோ பொதுப்பேரவையின் தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், "நாவே பல்லால் கடிக்கப்படும்" எனும் மலாய் பழமொழியை மேற்கோள் காட்டி, நெருக்கமானவர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு என்றார்.

"வெளியேற வேண்டாம், ஒருவரை ஒருவர் கட்டிப் பிடிப்போம். சிறிது காலம் கோபித்துக் கொள்வதில் தவறில்லை, ஆனால் அதைத் தொடர வேண்டாம். உங்களைச் சமாதானப்படுத்தி எங்களுக்குச் சோர்வாகி விட்டது. மீண்டும் வாருங்கள், நமது 'பெரிய வீட்டில்' அமருங்கள். நாம் பாரிசான் நேஷனலில் தோழர்கள்" என்று அஹ்மாட் ஸாஹிட் உருக்கமாகப் பேசினார்.

கடந்த ஆண்டு மஇகாவின் சில மாநில பொதுப் பேரவைகள், பெரிக்காத்தான் நேஷனலுடன் ஒத்துழைக்கத் தீர்மானம் நிறைவேற்றியதால் பாரிசான் நேஷனலுக்குள் பதற்றம் அதிகரித்தது. மஇகா பாரிசான் நேஷனலிருந்து வெளியேறுவது குறித்த இறுதி முடிவை வரும் பிப்ரவரி மாதம் எடுக்கும் என அதன் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் சமீபத்தில் கூறியிருந்தார்.

Related News