திருக்குர்ஆனை அவமதித்ததாகவும், வரம்பு மீறிய அவதூறு கருத்துக்களைப் பகிர்ந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மீதான சர்ச்சை, அரசியலாக்கப்படவோ அல்லது நிலைமையை மோசமாக்கும் வகையில் திசைதிருப்பப்படவோ கூடாது என்று மலேசிய இந்து கோயில்கள் மற்றும் இந்து அமைப்புகளின் ஒருங்கிணைப்பு பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ என். சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் முடிவு தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்றும், எல்லை மீறிய இந்தச் செயல் முழுமையாக சட்ட நடைமுறைக்கு விடப்பட்டுள்ளதை தாம் கவனிப்பதாகவும் டத்தோ சிவகுமார் குறிப்பிட்டார்.
இருப்பினும், சம்பந்தப்பட்ட மாணவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாகக் கூறப்படும் தகவல், இந்தச் சர்ச்சை வெடித்து ஐந்து நாட்களுக்குப் பிறகு வெளிவந்திருப்பது இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது என்று அவர் கூறினார்.
"தொடக்கத்திலேயே இந்த உண்மையை மறைத்ததன் நோக்கம் என்ன? இதன் விளைவாக பொதுமக்களிடையே தேவையற்ற வியாக்கியானங்கள் உருவாக்கப்பட்டு, நிலைமை மோசமடைந்தது. இந்தச் சம்பவத்தால் மக்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதும், மதம் மற்றும் நம்பிக்கைகளைத் தூற்றுவதும் நிகழ்ந்துள்ளது.
இந்தத் தகவல் முன்னரே தெரிந்திருந்தும் அது விளக்கப்படவில்லை என்றால், இத்தகைய செயல் மலேசிய மக்களின் ஒற்றுமையை அச்சுறுத்தும் ஒரு நடவடிக்கையாகவே கருதப்படும்," என்று டத்தோ சிவகுமார் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இந்த விவகாரம் உச்சக்கட்டத்தை அடைந்தபோது, உண்மையான தகவல்கள் ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தப்படாததால் சமூக ஊடகங்களில் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் இழிவுபடுத்தப்பட்டும் வசைபாடப்பட்டும் உள்ளதாக டத்தோ சிவகுமார் சுட்டிக்காட்டினார்.
மதம் மாறுவது என்பது மத சுதந்திரக் கொள்கையைப் பின்பற்றும் இந்நாட்டில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உள்ள உரிமை என்பதை வலியுறுத்தினார். மேலும், ஒருவர் தான் நம்பும் மதத்தைத் தேர்ந்தெடுப்பதில் தவறில்லை என்றாலும், தேவையற்ற சமூகத் தாக்கங்களையும் தவறான புரிதல்களையும் தவிர்க்கும் பொருட்டு, இது குறித்து நெருங்கிய குடும்பத்தினரிடம் முன்கூட்டியே தெரிவிப்பது மிகவும் கண்ணியமான மற்றும் சரியான செயலாக இருக்கும் என்றும் டத்தோ சிவகுமார் குறிப்பிட்டார்.








