சிரம்பான், ஜூலை.26-
கெடா மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ முஹமட் சனூசி முஹமட் நோர் ஆற்றிய உரை திரித்து வெளியிடப்பட்டு, அவரை இனவாதியாகச் சித்தரிக்க முயற்சிக்கப்படுவதாக பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் தகவல் பிரிவுத் தலைவர் டான் ஶ்ரீ அனுவார் மூசா குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை சிரம்பானில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஒன்றில் பேசிய அவர், “ஒவ்வொரு இனத்தவருக்கும் அவர்களுக்கென ஒரு நாடு உள்ளது. கம்போட்டியா மக்களுக்கு கம்போடியா, தாய்லாந்து மக்களுக்கு தாய்லாந்து இருப்பதைப் போல, மலாயர்களுக்கு தானா மெலாயு மட்டுமே உள்ளது என்பதையே முஹமட் சனூசி குறிப்பிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மலாய்க்காரர்களிடம் தேசப்பற்றை ஏற்படுத்தும் நோக்கில்தான் அவர் அந்த கருத்தை தெரிவித்ததாகவும் அனுவார் மூசா குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் சிலர் அவரது உரையை தவறாக சித்தரித்து, இந்தியர்கள் இந்தியாவுக்கும், சீனர்கள் சீனாவுக்கும் திரும்பிச் செல்ல வேண்டும்” என்று முஹமட் சனூசி கூறியதாக பொய்யான தகவல்களை பரப்பியுள்ளதாகவும், இது தொடர்பாக போலீசிடம் புகார் அளிக்கப்படும் என்றும் அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்ஃஸப்னி அஹ்மாட், முஹமட் சனூசியின் தேர்தல் பிரச்சார உரை தொடர்பாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், குற்றவியல் சட்டம் பிரிவு 505 மற்றும் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.








