பட்டர்வொர்த், ஆகஸ்ட்.02-
ஜோகூர் மற்றும் நெகிர் செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்ய பக்காத்தான் ஹராப்பான், வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.
இது குறித்து பினாங்கு மாநில முதலமைச்சர் Chow Kon Yeow இன்று வெளியிட்டுள்ள தகவலில், 16-வது பொதுத் தேர்தல் மற்றும் பிற மாநிலத் தேர்தல்களுக்கான முன்கூட்டிய தயாரிப்பின் ஒரு பகுதியாக இந்தக் கூட்டம் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தக் கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் ஆராயப்பட்டு, புதிய தேர்தல் உத்திகள் வகுக்கப்படும் என்றும், குறிப்பாக முக்கிய தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க சமூக ஊடகப் பிரசாரத்தை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பினாங்கு மாநிலம் பட்டர்வொர்த்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பினாங்கு அமானா 2026 மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய Chow Kon Yeow இதனைத் தெரிவித்தார்.








