நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் ஜசெக சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராகக் களம் இறங்கும் எஸ். முகுந்தன், "நான் இந்தத் தொகுதிக்குப் புதுமுக வேட்பாளரே தவிர, தொகுதிக்குப் புதியவன் அல்ல" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சிரம்பான் மாநகரிலேயே பிறந்து வளர்ந்தவரான இவர், தெனாகா நேஷனல் பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறை பட்டதாரி ஆவார். சுமார் 7 ஆண்டுகள் பொறியியலாளராகப் பணியாற்றிய முகுந்தன், பின்னர் நிலவிற்பனை மற்றும் சொத்துடைமையான ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு, அதற்கான சான்றிதழ் பெற்று சொந்த நிறுவனம் ஒன்றை வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளார்.

சிரம்பான் ஜெயா தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ பி. குணசேகரனின் சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றிய பரந்த அனுபவம் இவருக்கு உண்டு. மேலும், சிரம்பான் மாநகர மன்றத்தின்த துணை கவுன்சிலாகாவும், ஆட்சிக்குழு உறுப்பினர் ஜே. அருள்குமாரின் ஆய்வியல் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
பொதுமக்களின் அன்றாடப் பிரச்சினைகளையும், அவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களையும் மாநகர மன்றத்திற்கு நேரடியாகக் கொண்டு சென்று உரிய தீர்வுகளைப் பெற்றுத் தந்துள்ளார். இதனால், மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே ஒரு வலுவான இணைப்புப் பாலமாகத் தாம் செயல்பட்டிருப்பதை முகுந்தன் தமது பேட்டியில் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டினார்.
மக்களோடு மக்களாகப் பல்லாண்டுகளாகப் பயணித்து வருவதால், சிரம்பான் ஜெயா தொகுதிக்குத் தாம் எவ்வகையிலும் புதியவர் அல்ல என்றும், மக்களின் தேவைகளை நன்கு அறிந்தவன் என்றும் சிரம்பான் ஜெயா தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் எஸ். முகுந்தன் தெளிவுபடுத்தியுள்ளார்.









