கோலாலம்பூர், அக்டோபர்.26-
மலேசியாவும் அமெரிக்காவும் இருதரப்புப் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கும், சந்தை அணுகலை விரிவுபடுத்துவதற்கும், விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டைப் பலப்படுத்துவதற்கும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டன. 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் ஒரு பகுதியாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையேயான சந்திப்பின் போது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் ஏற்றுமதியாளர்களுக்கும் முன்னோடியில்லாத சந்தை அணுகலை வழங்குவதுடன், 2004ஆம் ஆண்டு வர்த்தகம், முதலீட்டுக்கான அடிப்படைக் கட்டமைப்பிலிருந்து நிலவி வரும் நீண்ட காலப் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும். குறிப்பாக, இரசாயனங்கள், இயந்திரங்கள், வாகனங்கள், விவசாயப் பொருட்கள் போன்ற அமெரிக்கத் தொழில்துறை பொருட்களின் ஏற்றுமதிக்கு மலேசியா முக்கியச் சந்தை அணுகலை வழங்க உறுதி பூண்டுள்ளது.
இதற்குப் பதிலாக, மலேசியப் பொருட்களுக்கு அமெரிக்கா 19 விழுக்காடு வர்த்தக வரியைப் பராமரிக்கும். அதே சமயம் சில இணக்கமான தயாரிப்புகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும். மேலும், முக்கியமான தாதுக்களுக்கும் அரிய மண் தனிமங்களின் ஏற்றுமதிக்கும் மலேசியா எந்தத் தடையும் விதிக்காது என்றும், அமெரிக்க நிறுவனங்களுடன் இணைந்து உற்பத்தித் திறனை அதிகரிக்கப் பணியாற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் உயர் மட்டச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொழிலாளர் உரிமைகளை மேம்படுத்துதல், அத்துடன் முதலீட்டுப் பாதுகாப்பு, போலிப் பொருட்களை எதிர்ப்பது ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாகவும் உறுதியளித்துள்ளன.








