கடந்த 2008-ஆம் ஆண்டு தான் அளித்த பெட்ரோல் விலை குறைப்பு குறித்த வாக்குறுதியை, தற்போதைய சூழலோடு ஒப்பிட்டு விமர்சிப்பவர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
இன்று கோலகங்சார் மலாய் கல்லூரியில் நடைபெற்ற கேள்வி-பதில் அமர்வில் பேசிய அவர், தனது பழைய கருத்துக்கள் தவறாகச் சித்தரிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
"2008-இல் நான் அந்த வாக்குறுதியை அளித்தபோது சவூதி அரேபியாவிலேயே பெட்ரோல் விலை 50 சென்னாக இருந்தது. ஆனால் இன்று உலகெங்கிலும் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள்கூட விலையை ஏற்றிவிட்டன," என்றார்.
மேலும், புரூணையைத் தவிர்த்துப் பார்த்தால் மலேசியாவின் பெட்ரோல் விலை ஒரு ரிங்கிட் 99 சென்னாகும். இந்த விலையானது, இன்றும் உலகிலேயே மிகக்குறைவான ஒன்றே என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிய டத்தோஸ்ரீ , "மாற்றங்கள் என்பது கண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிடாது; அதற்கு முறையான கால அவகாசமும் தரமான செயல்பாடுகளும் அவசியம்," என்று வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் மற்றும் பேராக் மாநில உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.








