ஜோகூர் மாநிலத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நாடு இன்னும் பழைய இனவாத மற்றும் பிராந்தியக் கருத்துக்களுக்குள் சிக்கியிருப்பது கவலையளிப்பதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.
புத்ராஜெயாவில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு மாதத் தொடக்க விழாவில் பேசிய அவர், எந்தவொரு குறிப்பிட்ட கட்சியின் பெயரையும் குறிப்பிடாமல், ஜோகூரில் தற்போது எழுப்பப்பட்டு வரும் மாவட்ட மற்றும் மாநில உணர்வுகள் சார்ந்த பழைய விவாதங்கள் தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன என்று குறிப்பிட்டார்.
தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய பாதுகாப்புச் சவால்கள் வேகமாக மாறிவரும் வேளையில், நாம் இன்னும் பழைய அணுகுமுறைகளிலேயே மூழ்கியிருக்கக் கூடாது என்றும், இத்தகைய பொதுக் கருத்துக்கள் தானாக மாறும் வரை தலைவர்கள் காத்திருக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். இத்தேர்தலில், கூட்டாட்சி அரசில் பங்காளிகளாக இருக்கும் பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் ஆகிய கூட்டணிகள் அனைத்து 56 இடங்களிலும் நேரடியாகக் களம் காண்கின்றன. வரும் சனிக்கிழமை இறுதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.








