லிங்கி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் இடைக்கால மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண் , தனது நிர்வாகத் திறன் மற்றும் மாநில அரசின் சிறப்பான செயல்பாடுகளை முன்னிறுத்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அமினுடின் ஹரூண் தனது தற்போதைய பாதுகாப்பான சிகாமத் தொகுதியை விடுத்து, லிங்கி தொகுதியில் போட்டியிட எடுத்த முடிவு அவரது அரசியல் துணிச்சலைக் காட்டுகிறது. இத்தொகுதியில் நிலவும் மும்முனைப் போட்டி அவருக்கு சாதகமான ஒரு முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது.
பக்காத்தான் ஹராப்பான் வேட்பளாராக அமினுடின் ஹரூண், பாரிசான் நேஷனல் வேட்பாளராக டத்தோ முகமது பைசல் ராம்லி மற்றும் பெர்சத்து கட்சியின் வேட்பாளராக டத்தோ ஜாம்ரி முகமது சைட் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பெர்சத்து கட்சியின் வேட்பாளர் டத்தோ ஜாம்ரி முகமது சைட், களத்தில் இருப்பதால், அவர் மலாய் வாக்குகளைப் பிரிப்பார் என்றும், இது இடைக்கால மந்திரி பெசாரின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
மேலும், இத்தொகுதியில் உள்ள சீன மற்றும் இந்திய வாக்காளர்களின் முழுமையான ஆதரவைப் பெறுவதுடன், குறிப்பிடத்தக்க அளவு மலாய் வாக்குகளையும் தன் வசம் ஈர்த்தால், இடைக்கால மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாரூன் லிங்கி தொகுதியில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனை வெற்றியைப் பதிவு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கணிக்கப்படுகிறது.








