ஜோகூர் பாரு, ஜூன்.07-
ஜசெக கட்சியை உள்ளடக்கிய மாநில ஆட்சியில் அங்கம் வகிப்பதை விட, தமது பதவியைத் துறப்பதே மேல் என ஜோகூர் மந்திரி பெசார் ஓன் ஹாஃபிஸ் ஃகாஸி தெரிவித்துள்ளார்.
இஸ்கண்டார் புத்ரியில் இன்று நடைபெற்ற பாரிசான் நேஷனல் தேர்தல் இயந்திர துவக்க விழா நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், “பாரிசான் நேஷனலுக்கு வாக்களிப்பது ஜசெகவுக்கு ஆதரவளிப்பதற்கு சமம் என்ற குற்றச்சாட்டை மறுத்து, அதை “அவதூறு” என்று விவரித்தார்.
மேலும், இறைவனின் அருளால், ஜோகூர் சுல்தான் மற்றும் ஜோகூர் ரீஜென்ட் ஆகியோரின் ஒப்புதலுடன் தாங்கள் மீண்டும் மாநிலத்தில் ஆட்சியமைக்கும் சூழ்நிலையில், ஜசெக கட்சியுடன் ஒருபோதும் இணையமாட்டோம் என்றும் ஓன் ஹாஃபிஸ் ஃகாஸி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், ஜசெக கட்சியுடன் ஒரே மேசையில் அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் தாம் மந்திரி பெசாராகப் பதவி வகிக்கப் போவதில்லை என்றும், இது தான் ஜோகூரின் குணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலில், 56 தொகுதிகளிலும் போட்டியிடுவதை பாரிசான் நேஷனல் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன் மூலம், கூட்டரசு அளவிலான கூட்டணிக் கட்சியான பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் அல்லது முடா ஆகியவற்றுடன் தொகுதிப் பங்கீடு செய்து கொள்ளும் சாத்தியக்கூறு முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், பக்காத்தான் ஹராப்பானும் அனைத்து 56 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.








