நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலை குறித்து விவாதிக்க, துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹித் ஹமிடி விரைவில் அம்மாநிலத்தின் பாரிசான் நேஷனல் சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கவுள்ளார்.
இத்தகவலை அரசாங்கச் செய்தித் தொடர்பாளர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் உறுதிப்படுத்தியுள்ளார்.
நெகிரி செம்பிலான் மாநில அரசு நிர்வாகம் வழக்கம்போல இயங்குவதாகவும், ' Adat Perpatih ' எனப்படும் மரபுவழி விவகாரங்களில் மத்திய அரசு தலையிடாது என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெளிவுபடுத்தியுள்ளார்.
14 பாரிசான் நேசனல் மற்றும் 5 பெரிக்காத்தான் நேஷனல் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை மீட்டுக் கொண்டதால் எழுந்த குழப்பங்களுக்கு மத்தியில், நெகிரி செம்பிலான் மாநில அரசு மற்றும் ஒற்றுமை அரசாங்கம் நிலையாக இருப்பதாக டத்தோ ஃபஹ்மி தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், சட்டமன்றத்தைக் கலைக்கும் திட்டம் ஏதுமில்லை என்றும், அரச கட்டளைக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளதாக டத்தோ பாஹ்மி விளக்கினார்.








