பினாங்கு மாநிலத்தில் விரைவில் 100 சதவீத ரொக்கமில்லா பரிவர்த்தனையை நடைமுறைப்படுத்த மாநில அரசு உறுதிபூண்டுள்ளது.
இதற்காக மாநில அரசின் 24 துறைகள் மற்றும் முகமைகள் இணைந்து டிஜிட்டல் கட்டணப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இது குறித்து மாநில ஊராட்சி மற்றும் நகர்ப்புற திட்டமிடல் குழுத் தலைவர் ஹ்ங் மூய் லீ கூறுகையில், பயனாளர்களின் கருத்துகளை அறிய ஆய்வுகள் நடத்தப்பட்டு, டிஜிட்டல் கட்டண வசதிகளை மேலும் மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், மாநில அரசு அலுவலகங்கள், துறைகளின் இணையதளங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் பிற டிஜிட்டல் தளங்கள் மூலம் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கொம்தார்-இல் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஹ்ங் மூய் லீ குறிப்பிட்டுள்ளார்.








