கோம்பாக், ஏப்ரல்.19-
கட்சித் தலைமை அனுமதி அளித்தால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்கவைக்கத் தான் தயாராக இருப்பதாகச் சிலாங்கூர் மாநில முதல்வர் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார். கோம்பாக் பி.கே.ஆர் கிளைக் கூட்டத்தில் பேசிய அவர், மக்கள் வழங்கிய ஆணையைத் தொடர விரும்புவதாகவும், 1998-ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நீண்ட காலப் போராட்டத்தின் விளைவே இன்றைய வெற்றி என்றும் குறிப்பிட்டார்.
மதானி அரசாங்கத்தின் கீழ் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த வீட்டு வசதி சிக்கல்களுக்கும் நிலப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். எதிர்க்கட்சிகளின் அரசியல் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த அவர், டீசல் மானிய விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் பரப்பப்படுவதாகச் சாடினார். சிலாங்கூர் மக்கள் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகக் குறைந்த விலையில் பெட்ரோல் சலுகையைப் பெற்று வருவதாகவும், வெறும் தேர்தல் வாக்குறுதிகளை மட்டும் வழங்காமல் பொறுப்புணர்வுடன் செயல்படும் அரசாங்கமாகத் தாங்கள் திகழ்வதாகவும் அவர் வலியுறுத்தினார்.








