நாட்டில் உள்ள இந்து ஆலயங்களின் நில மேலாண்மை மற்றும் சட்ட அம்சங்கள் குறித்த விரிவான புரிதலை ஆலய பொறுப்பாளர்களக்கு வழங்கும் நோக்கில், வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பத்துமலை, ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோயில் மண்டபத்தில் ஒரு சிறப்பு கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
மலேசிய இந்து ஆலய-இந்து அமைப்புகளின் பேரவையான மஹிமா ஏற்பாடு செய்துள்ள இக்கருத்தரங்கு குறித்து அதன் தலைவர் டத்தோ என். சிவகுமார் கூறுகையில் ஆலய வழிபாட்டுத் தலங்களின் அமைவிடம், நில உரிமை மற்றும் சட்டப்பூர்வ தேவைகள் குறித்து ஆலய நிர்வாகத்தினர் அதிக அறிவும் உணர்வும் கொண்டிருப்பதை உறுதி செய்வதற்காக இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 'தேசிய நிலச் சட்டம், நகர, கிராம திட்டமிடல் சட்டத்தைப் புரிந்துகொள்ளுதல்: கோயில்களுக்கான நிலம்' என்ற தலைப்பில் இந்த அமர்வு அமையும் என்று இன்று பத்துமலைத் திருத்தலத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ சிவகுமார் விவரித்தார்.
இந்த விழிப்புணர்வு கருத்தரங்கானது, மஹிமா, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம், கியூமிக் (CUMIG) மற்றும் DSK ஆகிய அமைப்புகளின் கூட்டு ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவரும், மஹிமாவின் ஆலோசகருமான டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார் என்று டத்தோ சிவகுமார் தெரிவித்தார்.








