ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதியின் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஜி. மணிவண்ணன், தனது தீவிரப் பிரசாரத்தின் மூலம் இதுவரை 85 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்காளர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டியுள்ளார்!
எதிர்வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், எஞ்சிய 15 விழுக்காடு வாக்காளர்களையும் அடுத்த 3 நாட்களுக்குள் சந்தித்து விடுவேன் என பிகேஆர் சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் மணிவண்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பி.கே.ஆர் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அரசியல் செயலாளரான மணிவண்ணன், கடந்த 3 மாதங்களாகவே இப்பகுதியில் அடிமட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தூய்மையான நிர்வாகம், வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட தனது 10 முக்கிய வாக்குறுதிகளை வாக்காளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் மணிவண்ணன் தீவிரமாக உள்ளார்.
கடந்த முறை வெறும் 693 வாக்குகள் வித்தியாசத்தில் பாரிசான் நேஷனல் வென்ற இந்த ஜெராம் பாடாங் தொகுதியில், இந்த முறை பாரிசான் நேஷனலின் டத்தோ முகமது ஜைடி அப்துல் காதிர், பக்காத்தான் ஹராப்பானின் மணிவண்ணன், பெர்சத்துவின் ஸ்ரீ சஞ்சீவன் மற்றும் மலேசிய பூர்வகுடி மக்கள் கட்சியின் டயானா டால் ஆகியோருக்கு இடையே கடுமையான நான்கு முனைப் போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது.








