அம்னோவில் மீண்டும் இணையும் எண்ணம் தனக்கு இல்லை என்று அக்கட்சியின் முன்னாள் உச்சமன்ற உறுப்பினரான அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு அம்னோவிலிருந்து விலகி, பாஸ் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்ட அவர், தற்போது பாஸ் கட்சியை விட்டு அம்னோவில் மீண்டும் இணைய தனக்கு எந்த ஒரு நியாயமான காரணமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
பாஸ் கட்சி தான் தனது எதிர்காலமாகக் கருதுவதாகவும், அதில் தனிப்பட்ட முறையில் கொள்கைக்காகப் போராட இடமிருப்பதாகவும் அனுவார் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், அம்னோவிலிருந்து விலகி, பாஸ் கட்சியில் இணைந்த மற்ற உறுப்பினர்களும், அக்கட்சியிலேயே தொடர்வார்கள் எனத் தாம் நம்புவதாகவும் அனுவார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் அனைவரும், எந்த ஒரு நிபந்தனையும் இன்றி, கட்சியில் மீண்டும் இணையலாம் என அதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி கடந்த வாரம் அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








