ஜோகூர் பாரு, மே.17-
ஒற்றுமை அரசாங்கத்திற்குள் நிலவும் உறவுகள் மேலும் சீர்கெடும் பட்சத்தில், முன்கூட்டியே பொதுத்தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியானது இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜோகூரில் இன்று நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் 2026 மாநாட்டில் உரையாற்றிய அக்கூட்டணியின் தலைவரான அன்வார், அரசியல் கூட்டணிக்குள் உள்ள உறவை சிலர் விளையாட்டாக எடுத்துக் கொண்டால், மக்களிடமே மீண்டும் ஆணையைப் பெற நாடு முழுவதும் பொதுத்தேர்தலை நடத்த வேண்டிய சூழல் உருவாகலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்க்கட்சிகள் மோதல் அரசியலைத் தேர்வு செய்தால், பக்காத்தான் ஹராப்பான் அதற்கு “உறுதியான பதில்” அளிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த அறிவிப்பானது, ஜோகூர் மாநில பாரிசான் நேஷனல் கூட்டணி, அனைத்து 56 மாநில தொகுதிகளிலும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்ததையடுத்து வெளியாகியுள்ளது.
அதே வேளையில், நெகிரி செம்பிலானில் தேவையான சூழல் ஏற்பட்டால் முழுமையான போட்டிக்குத் தயாராக இருப்பதாக ஜசெக-வும் அறிவித்திருந்தது.
இதனிடையே, சிலாங்கூர், பினாங்கு உள்ளிட்ட மாநிலங்களிலும் பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் தயார் நிலையைப் பற்றி, விரைவில் கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஒற்றுமை அரசாங்கம் அரசியல் நிலைத்தன்மை மற்றும் தேசிய ஒற்றுமையை பாதுகாக்கும் நோக்கில் சீர்திருத்தங்களில் கவனமாக செயல்பட்டதாகவும், அதற்கிடையில் பல அழுத்தங்களை சந்தித்ததாகவும் அவர் தனது உரையில் விளக்கமளித்துள்ளார்.








