கோலாலம்பூர், பிப்ரவரி.26-
எதிர்வரும் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஒன்றாகச் செயல்படும் கட்சிகள், மாநில சட்டமன்றத் தேர்தல்களில் ஒருவருக்கொருவர் எதிராகப் போட்டியிடுவது தர்க்கமற்றது என அவர் சுட்டிக் காட்டினார்.
பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவம் இது குறித்து விரைவில் ஒரு முடிவை எட்ட வேண்டும் என வலியுறுத்திய போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக், "நாம் அனைவரும் ஒரு கூட்டணியாகத் தேர்தலைச் சந்திக்கப் போகிறோமா அல்லது தொகுதிப் பங்கீடின்றி சுயமாகப் போட்டியிடப் போகிறோமா என்பதில் தெளிவு வேண்டும். ஒத்துழைப்பு என்றால் அது முழுமையாக இருக்க வேண்டும்; இல்லையென்றால் களத்தில் மோதுவதற்குத் தயாராக வேண்டும். இதில் தெளிவற்ற நிலை நீடிக்கக்கூடாது," என்று தெரிவித்தார்.
கடந்த காலங்களில் சபா மாநிலத் தேர்தலில், மத்திய அரசாங்கத்தில் கூட்டணியாக இருந்த போதிலும் பாரிசான் நேஷனல் மற்றும் ஜி.ஆர்.எஸ் (GRS) ஆகிய கட்சிகள் தனித்தனியாக மோதிக் கொண்டதை ஒரு முன்னுதாரணமாகக் குறிப்பிட்ட அந்தோணி லோக், அத்தகைய சூழல் மீண்டும் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார். மேலும், தேவையற்ற செலவுகளைக் குறைக்கும் வகையில், தீபகற்ப மலேசியாவிலுள்ள 11 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களையும் 16-வது பொதுத் தேர்தலுடன் இணைத்து ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்றும் அவர் மீண்டும் முன்மொழிந்துள்ளார். இது நிர்வாகச் சிக்கல்களைக் களைவதுடன், வாக்காளர்களுக்கும் பெரும் வசதியாக இருக்கும் என்று சுட்டிக் காட்டினார்.








