பினாங்கில் சிறப்பான ஆட்சிப் பதிவைக் கொண்டிருந்தாலும், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மெத்தனமாக இருந்துவிடக்கூடாது என அதன் தலைவரும் பினாங்கு முதலமைச்சருமான சாவ் கோன் இயாவ் எச்சரித்துள்ளார். இன்றைய அரசியல் சூழலில் உண்மைகளை விட, பொதுமக்களின் கருத்துக்களும் உணர்வுகளுமே வாக்காளர்களிடம் அதிக செல்வாக்கு செலுத்துகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பினாங்கில் பொருளாதாரம், முதலீடு, வேலை வாய்ப்பு என நாம் பல சாதனைகளைப் படைத்து, நிலையான ஆட்சியைத் தந்துள்ளோம். ஆனால், இந்த வெற்றிகளை மக்களிடம் சரியாகக் கொண்டுச் சேர்க்காவிட்டால், அவை வாக்குகளாக மாறாது. எங்களின் விளக்கங்கள் தாமதமாவதால் சாதனைகள் மறைக்கப்பட்டு, எதிர்க்கட்சிகள் பொதுக் கருத்துக்களைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
இனி டிஜிட்டல் தளங்களில் நாம் தீவிரமாகச் செயல்பட வேண்டும். வெறுப்பு மற்றும் இனவாத அரசியலை உண்மைகளைக் கொண்டு முறியடிக்க வேண்டும். குறிப்பாக, எண்ணிக்கையில் அதிகரித்துள்ள இளம் வாக்காளர்களின் எண்ணங்களை நாம் சரியாகப் புரிந்து செயல்பட வேண்டும் என்று சாவ் கோன் இயாவ் வலியுறுத்தினார்.
கடந்த 2008 முதல் பினாங்கில் ஆட்சி செய்து வரும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி, தற்போது நான்காவது தவணையாக மாநிலத்தில் ஆட்சி செலுத்தி வருகிறது என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.








