முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் கைரி ஜமாலுட்டின், அம்னோ இன்னும் மீண்டும் எழுந்து மலாய் சமூகத்தின் ஆதரவைப் பெறக்கூடிய வலுவான அடிப்படையைக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் இயக்கங்களை உருவாக்குவதற்குப் பதிலாக, UMNO-வையே திருத்தி முன்னேற்றுவது சிறந்த வழி என கைரி கருதுகிறார். அதே நேரத்தில், தற்போதைய நிலையில் மலாய் அரசியல் கட்சிகள் அதிகமாக பிளவுபட்டிருப்பதுக் கவலைக்குரியது என்றும் கைரி குறிப்பிட்டார்.
“இப்போது மலாய் அரசியல் கட்சிகள் அதிகமாகப் பிரிந்து காணப்படுகின்றன. இது அந்த இனத்தின் அரசியல் சக்தியைப் பலவீனப்படுத்துகிறது என்று பலர் உணர்கிறார்கள்,” என கைரி கூறினார்.
மேலும், மலாய் அரசியல் சக்தியின் நிலைமை தற்போது பார்வையிலும், உண்மையிலும் குறைந்து வருவதாக தலைவர்கள் உணர்ந்து ஏற்க வேண்டியது அவசியம் என்றும் கைரி வலியுறுத்தினார்.
எனினும், UMNO மீது இன்னும் நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்த கைரி, கட்சியின் பிழைகள் மற்றும் பலவீனங்களை ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்ள வேண்டும் என்றார். குறிப்பாக 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை முன்னிட்டு ஏற்பட்ட குறைபாடுகள் கட்சிக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் கைரி குறிப்பிட்டார்.








