2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கைகள் சட்டமான சொஸ்மாவின் கீழ் தற்போது 6 குழந்தைகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் அமைப்பான சுவாராம் தெரிவித்துள்ளது.
அண்மையில், பெங்காலான் குண்டோர் சட்டமன்ற உறுப்பினர் மர்திய்யா ஜொஹாரி, கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி தனது வீட்டில், 17 வயது சிறுவன் சொஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட்டதாக குழந்தைகள் நல ஆணையரிடம் புகார் அளித்திருப்பதை சுவாராம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதேவேளையில், லங்காவியில் மற்றொரு சிறுவனும் சொஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக சுவாராம் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் அசூரா நஸ்ரோன் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சிறார்களின் குடும்பத்தினருக்கு போலீசார் வழங்கிய முதற்கட்ட தகவல்களின்படி, அதே நாளில் குறைந்தது நான்கு சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சொஸ்மாவின் கீழ் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்தது ஆறாக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, 16 நாட்களாக அச்சிறுவர்கள் சொஸ்மாவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அசூரா நஸ்ரோன் குறிப்பிட்டுள்ளார்.








